திண்ணை இணைய இதழ் - 30 ஆகஸ்ட் 2009
சுருக்கென்று ஒரு முள் குத்தியதைப் போல கேள்வி. சிரித்துக் கொண்டேதான் கேட்டான். இவனைப் போன்ற அமெரிக்கனுக்கு அது கை வந்த கலை.
''ஏன் இப்படி இருக்கிங்க?''
வாஷிங்டன் டல்லஸ் ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி சோதனைக்காக நீண்ட வரிசையில் நின்றிருந்தேன். மூன்று வருஷங்கள் கழித்து இந்தியா போகிற குறுகுறுப்பு மனசுக்குள் ஜில்லென்று பரவியிருந்தது.
''எப்படி இருக்கோம்?''
''ஒருத்தரை வழியனுப்ப நூறு பேர்.''
அவ்ன் கை காட்டிய திசையில் ஒரு இந்திய அப்பா ஊருக்குப் போக பெட்டி சகிதம் தயாராய் இருந்தார். அவருடைய மகன். மருமகள். நாலைந்து நண்பர்கள். இரண்டு பொடிசுகள் கண்ணாடியை ஒட்டிய சுவரில் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தன. எல்லோரையும் சிரிக்கச் சொல்லி ஒருவர் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர் பத்தாவது தடவையாக போர்டிங் பாஸ்களைக் காட்டி அவருக்கு என்னமோ சொல்லிக் கொண்டிருந்தார். இன்னுமொருவர் லண்டனில் எப்படி டெர்மினல் மாற வேண்டுமென்று அந்த அப்பா சலித்துப் போகுமளவுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
டெர்மினல் பூராவும் அதே ரகத்தில் பத்திருபது கோஷ்டிகள் கண்ணில் பட்டன.
டேவிட் என்று தன்னை குறிப்பிட்ட அந்த அமெரிக்கன் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு, ''என் சொந்த நாட்டில் நான் ஒரு மைனாரிட்டி மாதிரி உணர்கிறேன்.'' என்றான்.
சுருக்கென்றிருந்தாலு்ம் லேசாக சிரித்து வைத்தேன். ''நாங்க ஒரே குடும்பமா, ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா வாழ்ந்து பழகிட்டோம். உங்களை மாதிரி தீவுகளா வாழறதில்லை.''
''இதுக்குப் பேர் ஒத்தாசையா? அந்தப் பெரியவர் எப்படா ஃப்ளைட்டைப் பிடிச்சு ஓடிரலாம்ன்னு ரெடியா இருக்கிற மாதிரி தெரியுது. வீட்லயே பை பை சொல்லிட்டு உதவிக்கு ஒருத்ர் வந்து வழியனுப்பி வெக்கலாமே?''
அவனுக்கு பதில் சொல்லத் தெரியாமல் மையமாகப் பார்க்க, டேவிட் நிறுத்தாமல் தொடர்ந்தான்.
''அவர் டெர்மினலுக்குள்ளே போன பிறகும் கூட சட்டுன்னு இடத்தை காலி பண்ண மாட்டிங்க. அடுத்து அவங்கவங்க வீட்டுக்குப் போலாமா, இல்லை யாராவது ஒருத்தர் வீட்டுக்கு சாப்பிட போலாமா. அதுவும் இல்லை எங்காவது ரெஸ்ட்டாரென்ட் போகலாமான்னு லவுன்ஞ்சில் கொஞ்ச நேரம், லவுஞ்சை விட்டு வெளியே வந்து கொஞ்ச நேரம், அப்புறம் பார்க்கிங் லாட்டில் கொஞ்ச நேரம்ன்னு விவாதம் பண்ணி முடிச்சிட்டு அப்புறமாத்தான் கலைஞ்சு போவிங்க.'' பிரவுன் முடியை கோதிக் கொண்டே, ''என்ன நான் சொல்றது சரிதானே?'' .
நான் பிசிறும் குரலில், ''டேவிட், எங்களை நீ கூர்ந்து கவனிச்சிருக்கே. நிறைய இண்டியன் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா?''
''நோ. ஆனா இந்த ஊர்ல இப்ப திரும்பின பக்கமெல்லாம் நீங்க இருக்கிங்களே! என்னோட நெய்பர்ஸ் பத்து பேராச்சும் இருப்பாங்க. சனிக்கிழமையானா நெத்தியில் சாம்பலை பூசிட்டு ஜிகுஜிகுன்னு உங்க பாரம்பரிய உடைகளை மாட்டிகிட்டு கோயில். குழந்தைகளுக்கு ஸ்விம்மிங், டய்-க்வான்-டோ போதாதுன்னு கல்ச்சுரல் கிளாஸ் வேற. தே ஆர் ஓவர் லோடட். ஞாயித்துக் கிழமையானா கம்யூனிட்டியையே தூக்கியடிக்கிற மாதிரி மசாலா வாசனை.''
''எங்க கலாசாரத்தை குழந்தைகளுக்கு கத்துத் தரது உன்னை உறுத்துதா?''
''உங்களுக்கே தெரியாத உங்க கலாசாரத்தை உங்க குழந்தைகளுக்கு வீட்டுக்குள்ளே சொல்லித்தர முடியாம வெளியே அனுப்பி கத்து தர முயற்சிப்பதுதான் உறுத்துது.''
அடிபட்ட பார்வையில் அவனைப் பார்த்தேன். ''எங்க அடையாளத்தை இழந்துரணும்ன்னு சொல்றியா?''
''ரோமில் ரோமனா இருப்பது சவுகரியம்ன்னு சொல்றேன். சில அற்ப விஷயங்களை விடாப்பிடியா பிடிச்சிட்டு ரொம்ப மெனக்கெடறிங்க. ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்தியாவை இரும்பு வளையமா சுத்திகிட்டு அலையறிங்க. நீங்க குழம்பியது போதாதுன்னு உங்க குழந்தைகளையும் குழப்பி விடறிங்க.''
''நீ பொறாமைப்படறே டேவிட்.'' என்று சொன்ன போது - அவன் முறை வந்தது. பெட்டியையும், லேப்டாப்பையும் பெல்ட்டில் போட்டு விட்டு ஸ்கேனர் வழியே உள்ளே போனான்.
அவனைத் தொடர்ந்து நான்.
நான் சென்ற போது - பெரிதாய் பீப் சத்தம். ஸ்கேனர் கருவி அலற ஆரம்பித்தது. ச்ட்டென செக்யூரிட்டி ஆபிசர்கள் என்னை சூழ்ந்தார்கள். ஒரு ஆபிசர் கழுத்திலிருந்த என் தங்க செயினைக் காட்டினார். ''அதைக் கழட்டு.''
கழற்றி ட்ரேயில் போட்டு விட்டு மறுபடியும் ஸ்கேனரை கடக்க முயன்றேன். மீண்டும் அலறியது.
''பெல்ட்டில் மெட்டல் பக்கிள்ஸ். அதையும் கழட்டு.''
என்னை நானே நொந்து கொண்டு பெல்ட்டைக் கழற்றினேன். ஸ்கேனர் விடாப்பிடியாய் மறுபடி அலற – அவர்கள் சந்தேகத்தோடு என்னை ஓரமாய் நெட்டித் தள்ளிக் கொண்டு போனார்கள்.
''உனக்கு ஸ்பெஷல் செக்யூரிட்டி செக் பண்ணணும்.''
கையில் பிடித்த மெட்டல் டிடெக்டரால் மேலிருந்து கீழ் வரை ஒருவர் தடவ – இடுப்பருகே அலறியது அந்தக் கருவி. அதிகாரிகள் கொஞ்சம் டென்ஷனாகி, என்னைப் பற்றி கேஷுவலாய் விசாரித்தபடியே - பக்கத்திலிருந்த அறைக்கு தள்ளிக் கொண்டு போய் துகிலுரிந்தார்கள்.
''என்ன இது?''
இடுப்பிலிருந்த அரைஞாண் கயிறு. அதனோடு இணைந்த மெட்டல் தாயத்து. சின்ன வயசில் தண்ணீரில் முங்கி மூச்சுத் திணறித் தத்தளித்தவனை அந்த அரைஞாண் கயிறைப் பிடித்து அப்பா ஆற்றங்கரையில் தூக்கிப் போட்டது ஞாபகம் வந்தது. காலேஜ் படிக்கிற போது கழற்றி எறியப் போக, ''உனக்குக் கல்யாணமே நடக்காதுடா!'' என்று அம்மா என்னை பயமுறுத்தி திரும்ப கட்டி விட்டது நினைவுக்கு வந்தது.
''இட் லுக்ஸ் லைக் ஏ சயனைட் கேப்ஸ்யூல்.'' என்றான் ஒரு இளம் ஆபிசர்.
நான் அவசரமாய் தலையாட்டி மறுத்தேன். அந்தக் காலத்தில் ஃப்ரென்ச்சீஸுக்கு பதிலாக கோவணம் என்ற துண்டுத் துணியைக் கட்டிக் கொள்ள உபயோகப்பட்ட வஸ்து என்று அவனுக்கு விளக்கம் அளிக்க கூச்சப்பட்டு - ''நோ நத்திங்!. ஜஸ்ட் மத காரணங்களுக்காக அணிந்திருக்கிறேன். நீ பயப்படும் அளவுக்கு இதில் ஒன்றுமில்லை.''
அவர்கள் அதைக் கழற்றி சற்று நேரம் தீவிரமாக சோதனை போட்டார்கள். என் பாஸ்போர்ட், விசா, குடியுரிமை சமாசாரங்களை கம்ப்யூட்டரில் மேய்ந்து - திருப்தி அடைந்த பின், சம்பிரதாயமாய் வருத்தம் தெரிவித்து விட்டு அனுப்பி வைத்தார்கள்.
மடியில் கனம் இல்லை என்றாலும் ஸ்பெஷல் செக்யூரிட்டி சோதனை தந்த பரபரப்பில் வியர்த்து விறுவிறுத்துப் போயிருந்தேன்.
உடைகளைத் திருத்திக் கொண்ட பின், ஆபிசர்கள் கழற்றிக் கொடுத்த அரைஞாண் கயிறையே சற்று நேரம் பார்த்தேன். குப்பைத் தொட்டியில் எறியலாமா என ஒரு விநாடி மனசில் தோன்றியது.
மறுபடி இடுப்பில் கட்டிக் கொள்வதற்காக பாத்ரூம் தேடிச் சென்றேன். ▀
-சத்யராஜ்குமார்
05 செப்டம்பர் 2009
தொடர்புடைய பதிவு: இன்று - Today >> திண்ணை
